திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.41 திருச்சோற்றுத்துறை
பொய்விரா மேனி தன்னைப்
    பொருளெனக் காலம் போக்கி
மெய்விரா மனத்த னல்லேன்
    வேதியா வேத நாவா
ஐவரால் அலைக்கப் பட்ட
    ஆக்கைகொண் டயர்த்துப் போனேன்
செய்வரால் உகளுஞ் செம்மைத்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
1
கட்டராய் நின்று நீங்கள்
    காலத்தைக் கழிக்க வேண்டா
எட்டவாங் கைகள் வீசி
    எல்லிநின் றாடு வானை
அட்டமா மலர்கள் கொண்டே
    ஆனஞ்சும் ஆட்ட ஆடிச்
சிட்டராய் அருள்கள் செய்வார்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
2
கல்லினாற் புரமூன் றெய்த
    கடவுளைக் காத லாலே
எல்லியும் பகலு முள்ளே
    ஏகாந்த மாக ஏத்தும்
பல்லில்வெண் டலைகை யேந்திப்
    பல்லிலந் திரியுஞ் செல்வர்
சொல்லுநன் பொருளு மாவார்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
3
கறையராய்க் கண்ட நெற்றிக்
    கண்ணராய்ப் பெண்ணோர் பாகம்
இறையராய் இனிய ராகித்
    தனியராய்ப் பனிவெண் டிங்கட்
பிறையராய்ச் செய்த வெல்லாம்
    பீடராய்க் கேடில் சோற்றுத்
துறையராய் புகுந்தெ னுள்ளச்
    சோர்வுகண் டருளி னாரே.
4
பொந்தையைப் பொருளா வெண்ணிப்
    பொருக்கெனக் காலம் போனேன்
எந்தையே ஏக மூர்த்தி
    யென்றுநின் றேத்த மாட்டேன்
பந்தமாய் வீடு மாகிப்
    பரம்பர மாகி நின்று
சிந்தையுட் டேறல் போலுந்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
5
பேர்த்தினிப் பிறவா வண்ணம்
    பிதற்றுமின் பேதை பங்கன்
பார்த்தனுக் கருள்கள் செய்த
    பாசுப தன்றி றமே
ஆர்த்துவந் திழிவ தொத்த
    அலைபுனற் கங்கை யேற்றுத்
தீர்த்தமாய்ப் போத விட்டார்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
6
கொந்தார்பூங் குழலி னாரைக்
    கூறியே காலம் போன
எந்தையெம் பிரானாய் நின்ற
    இறைவனை ஏத்தா தந்தோ
முந்தரா அல்கு லாளை
    யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செந்தாது புடைகள் சூழ்ந்த
    திருச்சோற்றுத் துறைய னாரே.
7
அங்கதி ரோன வனை
    அண்ணலாக் கருத வேண்டா
வெங்கதி ரோன் வழியே
    போவதற் கமைந்து கொண்மின்
அங்கதி ரோன வனை
    யுடன்வைத்த ஆதி மூர்த்தி
செங்கதி ரோன்வ ணங்குஞ்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
8
ஓதியே கழிக்கின் றீர்கள்
    உலகத்தீர் ஒருவன் றன்னை
நீதியால் நினைக்க மாட்டீர்
    நின்மலன் என்று சொல்லீர்
சாதியா நான்மு கனுஞ்
    சக்கரத் தானுங் காணாச்
சோதியாய்ச் சுடர தானார்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
9
மற்றுநீர் மனம்வை யாதே
    மறுமையைக் கழிக்க வேண்டிற்
பெற்றதோர் உபாயந் தன்னாற்
    பிரானையே பிதற்று மின்கள்
கற்றுவந் தரக்க னோடிக்
    கயிலாய மலைஎ டுக்கச்
செற்றுகந் தருளிச் செய்தார்
    திருச்சோற்றுத் துறைய னாரே.
10
திருச்சிற்றம்பலம்

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.85 திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம்
காலை யெழுந்து கடிமலர்
    தூயன தாங்கொணர்ந்து
மேலை யமரர் விரும்பு
    மிடம்விரை யான்மலிந்த
சோலை மணங்கமழ் சோற்றுத்
    துறையுறை வார்சடைமேல்
மாலை மதியமன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
1
வண்டணை கொன்றையும் வன்னியும்
    மத்தமும் வாளரவுங்
கொண்டணைந் தேறு முடியுடை
    யான்குரை சேர்கழற்கே
தொண்டணைந் தாடிய சோற்றுத்
    துறையுறை வார்சடைமேல்
வெண்டலை மாலையன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
2
அளக்கு நெறியினன் அன்பர்கள்
    தம்மனத் தாய்ந்துகொள்வான்
விளக்கு மடியவர் மேல்வினை
    தீர்த்திடும் விண்ணவர்கோன்
துளங்குங் குழையணி சோற்றுத்
    துறையுறை வார்சடைமேற்
றிளைக்கும் மதியமன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
3
ஆய்ந்தகை வாளர வத்தொடு
    மால்விடை யேறியெங்கும்
பேர்ந்தகை மானட மாடுவர்
    பின்னு சடையிடையே
சேர்ந்தகைம் மாமலர் துன்னிய
    சோற்றுத் துறையுறைவார்
ஏந்துகைச் சூல மழுவெம்
    பிரானுக் கழகியதே.
4
கூற்றைக் கடந்ததுங் கோளர
    வார்த்ததுங் கோளுழுவை
நீற்றில் துதைந்து திரியும்
    பரிசது நாமறியோம்
ஆற்றிற் கிடந்தங் கலைப்ப
    அலைப்புண் டசைந்ததொக்குஞ்
சோற்றுத் துறையுறை வார்சடை
    மேலதோர் தூமதியே.
5
வல்லாடி நின்று வலிபேசு
    வார்கோளர் வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும்
    வானவர் வந்திறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற
    சோற்றுத் துறையுறைவார்
வில்லாடி நின்ற நிலையெம்
    பிரானுக் கழகியதே.
6
ஆய முடையது நாமறி
    யோம்அர ணத்தவரைக்
காயக் கணைசிலை வாங்கியு
    மெய்துந் துயக்கறுத்தான்
தூயவெண் ணீற்றினன் சோற்றுத்
    துறையுறை வார்சடைமேற்
பாயும்வெண் ணீர்த்திரைக் கங்கையெம்
    மானுக் கழகியதே.
7
அண்டர் அமரர் கடைந்
    தெழுந் தோடிய நஞ்சதனை
உண்டும் அதனை ஒடுக்க
    வல்லான் மிக்க உம்பர்கள்கோன்
தொண்டு பயில்கின்ற சோற்றுத்
    துறையுறை வார்சடைமேல்
இண்டை மதியமன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
8
கடல்மணி வண்ணன் கருதிய
    நான்முகன் றானறியான்
விடமணி கண்ட முடையவன்
    றானெனை ஆளடையான்
சுடரணிந் தாடிய சோற்றுத்
    துறையுறை வார்சடைமேற்
படமணி நாகமன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
9
இலங்கைக் கிறைவன் இருபது
    தோளு முடிநெரியக்
கலங்க விரலினா லூன்றி
    அவனைக் கருத்தழித்த
துலங்கல் மழுவினன் சோற்றுத்
    துறையுறை வார்சடைமேல்
இலங்கு மதியமன் றோவெம்
    பிரானுக் கழகியதே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com